பதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள் : தகுதி பட்டியல் பரிசீலிக்கப்படுமா?

கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 




அரசு பள்ளிகளில் கற்பித்தல் மேம்பாடு, செயல்பாடுகள் கண்காணிப்பு, 14 வகை மாணவர் நலத்திட்டங்கள் வழங்கல் உட்பட பல்வேறு பணிகளில் தலைமையாசிரியர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. ஏற்கனவே பெரும்பாலான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், சமீபத்தில் 40:35 என்ற விகிதாசாரம் அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 29 பேருக்கு டி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால், பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தற்போது தலைமையாசிரியர்கள் இல்லை.

அதேநேரம், பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியல் தயார் நிலையில் இருந்தும், அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படாததால் தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கல்வி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க முன்னாள் மாநில சட்ட செயலாளர் சின்னப்பாண்டி கூறுகையில், இப்பிரச்னையால் நலத்திட்டங்கள் வழங்குவதில் சிக்கல் எழுகிறது. முழு ஆண்டு தேர்வில் மாணவர் தேர்ச்சி பாதிக்கும். கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தி தகுதி பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உடன் பதவி உயர்வு அளிக்க வேண்டும், என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022