சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, சத்துணவு அமைப்பாளராக, தமிழகத்திலேயே முதல் முறையாக, திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் ஒன்றியம், சிறுநாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 56; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி ஜெயகாந்தி, 52. இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், ஜெயப்பிரகாஷ், சிறுநாத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு வரையும், கீழ்பென்னாத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வரையும் படித்தார்.



இவர், 10ம் வகுப்பு படிக்கும்போது, இவரது உடலில் மாற்றம் ஏற்பட்டு, திருநங்கை போல் நடந்து கொண்டார்; பெற்றோர் கண்டித்தனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை; தன் பெயரை ஜெயா என மாற்றிக் கொண்டார். பிளஸ் 2 படித்து முடித்தவுடன், 2010ல், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு படித்தார்.

பெற்றோர் இவரை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்ததால், கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, யாருக்கும் தெரியாமல் பெங்களூரு சென்று, அங்குள்ள திருநங்கையருடன் இணைந்து பிழைப்பு நடத்தினார். சிறுநாத்துார் அருகே உள்ள ஏர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடத்துக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் அறிந்து, விண்ணப்பித்தார்.

இவரது மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் ஞானசேகரன், அவரது மனுவை தேர்வு செய்து, அவருக்கு பணி நியமன ஆணையை நேற்று வழங்கினார். இது குறித்து திருநங்கை ஜெயா, நிருபர்களிடம் கூறியதாவது: திருநங்கையான என்னை குடும்பத்தார் ஒதுக்கினர். பிழைக்க வழியின்றி, பெங்களூரு சென்று கடைகளில் கும்மியடித்து பிழைப்பு நடத்தினேன்.

உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால், வேலை தேடத் துவங்கினேன். ஆனால், எங்கு சென்றாலும், எனக்கு பணி கொடுக்க மறுத்துவிட்டனர். அப்போது, ஏர்ப்பாக்கம் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்தேன்; இதில் தேர்வு பெற்றுள்ளேன். இதனால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022