அரசு முயற்சிகளை ஆராய நேரம் இது
ஆதார் அடையாள எண் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பயோமெட்ரிக் அடையாளம் கொண்ட ஆதார் அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான முடிவை, அரசு கொண்டு வரப் போகிறது.
லோக்சபாவில் இதற்கான மசோதா, அரசமைப்பு சட்ட விதி - 110ன் கீழ் கொண்டு வரப்பட்டது. உணவு, விவசாயம் உட்பட பல மானியங்கள் வழங்க, இந்த எண் முக்கியமாக்கப்படுவதால், அரசு நிதி சேதாரம் குறையும்.ஆனால் தற்போது இந்த மசோதாவை, பொருளாதார சம்பந்தப்பட்ட மசோதாவாக லோக்சபாவில் அனுமதிப்பதா, அம்மசோதா ராஜ்யசபாவிலும் அனுமதிக்கப்படலாமே என்ற யோசனை எழுந்திருக்கிறது.
'இம்மசோத நிதி சம்பந்தப்பட்டது' என, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளதால், லோக்சபாவில் இது நிறைவேற வழி உள்ளது. ஏனெனில், நிதி மசோதா என்ற முத்திரை பெறுவதில், சபாநாயகர் முடிவும் முக்கியத்துவம் பெறுகிறது.அரசியல் மற்றும் நிர்வாகம் இணைந்து தரும் பல்வேறு இலவச திட்டங்கள், நுாறு நாள் வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள், மானிய உதவிகள், இதனால் ஒழுங்குபடுத்தப்படலாம். அத்துடன், பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களுக்கும் இது இணைக்கப்படும் போது, ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தை, மார்க்சிஸ்டுகளும், காங்கிரசில் ஒரு பகுதியினரும் கூறுகின்றனர்.
ஏற்கனவே, ஆதார் அடையாள எண்ணை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிமுகப்படுத்திய போதும், அதன் முக்கியத்துவத்தை திடீரென மாற்றினர். ஆனால், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆதார் அடையாள எண்ணை சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளையில் அறிமுகமாக்கி வெற்றி கண்டது. படிப்படியாக ஆதார் எண் முக்கியத்துவம் பெறும்போது, அதற்கான சட்டவழி நடைமுறையை உருவாக்க, இம்மசோதா உதவும்.
இந்த முறையை மத்திய அரசு பின்பற்றியது ஒரு வகையில் நல்லதே. ராஜ்யசபாவின் அனுமதிக்காக காத்திருக்கும் பல மசோதாக்கள் நிறைவேறாததால், பல பொருளாதார முயற்சிகள் பின் தங்கி உள்ளன. ஆகவே, இதை நிதி மசோதா என்று அறிமுகப்படுத்திய அரசு செயல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழிகாட்ட உதவிடும்.
மத்திய பட்ஜெட், 2016-2017 காட்டிய தகவல்களில், ஆதார் அடையாள எண் பொருளாதார சீர்திருத்த பாதைகளுக்கான கருவிகளில் ஒன்றாகும். ஏதோ முன்பிருந்த அரசு, ஆதார் எண்ணை பொருளாதார கருவியாக பயன்படுத்த முயன்றதாகவும், அதை எதிர்க்கட்சியான, பா.ஜ., அன்று தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஆதார் முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் குறைத்து, அந்த முயற்சிகளை அன்று தடுத்தனர் என்பதை அனைவரும் அறிவர். பணமாக மானியங்களை தருவது சரியான வழி அல்ல என்ற போர்வையையும் இவர்கள் பயன்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை குறைத்தனர்.இன்று கறுப்பு பண விவகாரம், கோடீஸ்வரர்கள் முறைகேடாக ஈட்டும் பணம் குறித்த வழக்குகள் ஆகியவற்றில் சுப்ரீம் கோர்ட் எடுக்கும் முடிவுகள், பல அதிரடி தகவல்களைத் தெரிவிக்கிறது என்பதை அறிவோம்.
அதே போல, எது தேசியம், ஆர்ப்பாட்டங்களில் எந்த அளவு மாணவர்கள் கோஷம் சரியானது என்பதையும், நீதிமன்றம் முடிவு செய்யும் காலமாக இருக்கிறது.
அதே போல வராக்கடன் விஷயத்திலும், சில தவறான பணப் பரிவர்த்தனைகளை முடக்குதில், ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகளும், பல விஷயங்களில் ஊழலை வௌிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
ஊழல் வௌிச்சத்திற்கு வரும் காலமாக இந்த நேரம் அமையும் போது, அது குறித்த முழு பின்னணி தகவல்கள், அதிவேகமாக வரும்போது, அரசின் முடிவுகளை அலசி, விழிப்புணர்வு பெறும் முயற்சிகள் அதிகம் காணோம்.
பொருளாதார கட்டமைப்பு உருவாக வழிகாண்பதில் உள்ள திட்டம் அல்லது முடிவுகளை அலசுவதே, நம் மொத்த வளர்ச்சி அதிகரிக்க, உருப்படியான வழிகளை அரசு உருவாக்குகிறதா என்பதை அறிய உதவும்.