அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்தை பாட வேண்டும்
அனைத்து தனியார் பள்ளிகளும் தேசிய கீதம் பாடுவதை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரரான என்.செல்வதிருமால் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் சில பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் தினமும் தேசிய கீதம் பாட வேண்டும் என உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.எஸ்.இ. சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "தேசிய கீதம் பாடுவது தொடர்பாக கடந்த 2014 செப்டம்பர் 22-ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனியார் பள்ளிகள், தேசிய கீதம் பாடுவதை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மேலும், சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளவை உண்மையில் நிறைவேற்றப்படுகிறதா என்பதை தொடர்புடைய அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.