போலி இ.மெயிலைக் கண்டு ஏமாறவேண்டாம்: வருமான வரித்துறை எச்சரிக்கை
டெல்லி: வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை தொடர்புடைய ரகசிய எண்களையோ, கடவுச் சொற்களையோ வருமான வரித் துறை கோரவில்லை. அதுபோன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வருமான வரித்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலங்களாக வருமான வரித்துறையினரின் பெயரில் போலியான மின்னஞ்
சல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, அவர்களின் ரகசிய தகவல்களை கேட்டுப்பெற்றது சில போலி மின்னஞ்சல்கள். இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு பல புகார்கள் சென்றன.இதையடுத்து இதுதொடர்பாக வருமான வரித் துறை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதில் , மின்னணு நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரி செலுத்துவோருடனான வழக்கமான தொடர்புகள் அனைத்தையும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித் துறையின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி, போலியான மின்னஞ்சல்களை அனுப்பும் மோசடியாளர்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை தொடர்புடைய ரகசிய எண்களையோ, கடவுச் சொற்களையோ வருமான வரித் துறை எப்போதும் கோரவில்லை. அதுபோன்ற ரகசிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம். மேலும், அந்த மின்னஞ்சல்களுடன் வரும் இணைப்புகளையும் திறந்துபார்க்கவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.