தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா!!

தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 




தமிழகத்தில், மார்ச், 4 முதல், பிளஸ் 2; மார்ச், 15 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன; 15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், குறுக்கு வழியில் மாநில, 'ரேங்க்' பிடிக்க நினைக்கும் சில தனியார் பள்ளிகளுக்கு, 'செக்' வைக்க, தேர்வு அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சந்தேகத்துக்கு இடமான தனியார் பள்ளிகள் பட்டியல் தயாராகி வருகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சில ஆண்டுகளாக, கொங்கு மண்டலத்தில் உள்ள, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள்; மதுரை மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும், மாநில, 'ரேங்க்' எடுக்கின்றன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, தனியார் பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆள் மாறாட்டம் செய்ததும்; கேள்வித்தாளை, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிற ஆசிரியர்களுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த பிரச்னை, பொதுத் தேர்வில் விஸ்வரூபம் எடுத்தது; இது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே, இந்த ஆண்டு, தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட உள்ளது. மேலும், தேர்வு அறையில், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில் அதிகாரிகள், ஆசிரியர்கள் உதவியுடன் முறைகேடு நடப்பது இதன் மூலம் தடுக்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறின. அதிகாரிகள், அரசியல்வாதிகள் உடந்தை சில குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் மாநில, 'ரேங்க்' பிடிக்கின்றன. மேலும், அரசு பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, சில தனியார் பள்ளிகள் முன்னிலை பெறுகின்றன. இதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். அதனால் தான், கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; மொபைல் போனுக்கு கட்டுப்பாடு போன்ற திட்டங்களை, தேர்வுத் துறையால் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியவில்லை என, கூறப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)

RTI Letter Application - SG Asst 750 pp regarding