"பிளஸ் 2 தனித் தேர்வர்கள் செல்லிடப்பேசியுடன் வந்தால் நடவடிக்கை'
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் செல்லிடப்பேசியுடன் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் இர. திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் மார்ச் 4-ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்தேர்வு 85 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 29,041 பள்ளி மாணவர்கள், 839 தனித் தேர்வர்கள் என மொத்தம் 29,880 பேர் எழுதவுள்ளனர். இந்தத் தேர்வுக்கு வரும் தனித்தேர்வர்கள் செல்லிடப்பேசியுடன் வரக்கூடாது. செல்லிடப்பேசிகளைத் தேர்வு மையத்தில் பாதுகாக்கும் வசதி ஏதும் இல்லை.
எனவே, தனித்தேர்வர்கள் தேர்வுக்கு வரும்போது செல்லிடப்பேசியைத் தவிர்த்து தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இந்த அறிவுரையைப் பின்பற்றாமல் செல்லிடப்பேசியுடன் தேர்வு மையத்துக்கு வரும் தனித்தேர்வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.