10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு

அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


           பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுன்தினம் (ஏப்., 16) துவங்கியது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (ஏப்., 18) முதல் உதவி தேர்வாளர்கள் திருத்த உள்ளனர். கணிதத் தேர்வில் பிரிவு 4 ல் 47 வது 'அ' பிரிவு 'கிராப்க்கான' (10 மதிப்பெண்கள்) வினாவில் இரு சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இதில் முதல் சமன்பாடு சரியாகவும், 2 வது தவறாகவும் இருந்தன. இதையடுத்து தவறான சமன்பாட்டிற்கு 4 மதிப்பெண்கள் கருணையாக கொடுக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் முதல் சமன்பாட்டை சரியாக செய்து 6 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே 4 மதிப்பெண்கள் கருணையாக வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையால் கருணை மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் எம்.கோவிந்தராஜ் கூறியதாவது: பெரும்பாலான மாணவர்கள் தவறான வினாவிற்கு மதிப்பெண் கிடைக்கும் என நினைத்து, வினா வரிசை எண்ணை மட்டும் எழுதியுள்ளனர். சிலர் குழப்பத்துடன் பதில் அளித்துள்ளனர். மேலும் முதல் சமன்பாட்டிற்கான விடையில் அளவுதிட்டம், வரைபடம், தீர்வுக்கு தலா 2 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஒன்று தவறானாலும் கருணை மதிப்பெண்கள் கிடைக்காது. தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் பெரும்பாலான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் கிடைப்பது கஷ்டம். சிலருக்கு 100 மதிப்பெண்கள் வாய்ப்பும் பறிபோகும். கடந்த காலங்களில் தவறான கேள்விகளுக்கு வரிசை எண்ணை குறிப்பிட்டாலே முழு மதிப்பெண் கிடைக்கும். தேர்வுத்துறை 10 மதிப்பெண்களையும் முழுமையாக வழங்க வேண்டும், என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022