தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு வேலை இல்லா ஆசிரியர்கள் எதிர்ப்பு;

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு வேலை இல்லா ஆசிரியர்கள் எதிர்ப்பு; கருணாநிதி வீட்டில் மனு கொடுத்தனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ளது போன்று பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று வேலைஇல்லா ஆசிரியர்கள் கருணாநிதி வீட்டில் மனு அளித்தனர்.


          வேலைஇல்லா ஆசிரியர்கள்தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் ஓவிய, தையல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்தசங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், பொது செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் ஏராளமானவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தனர்.ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த பாதுகாவலரிடம் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு சென்றனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

30 ஆயிரம் பேர் பாதிப்பு

தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்கல்வி, ஓவியம் மற்றும் தையல் கலை ஆசிரியர்கள் பகுதி நேர அடிப்படையில் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் எல்லோரும் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்தவர்கள்.ஆனால் நாங்கள் கடந்த 1998-ம் வருடத்தில் இருந்து பதிவுசெய்து காத்திருக்கிறோம். தற்போது வெளிவந்திருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்படி செய்வதன் மூலம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இந்த உறுதி மொழியை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022