மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை:

மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை: மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்;
மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக கூறியுள்ளது.நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.
'இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும்' என, தொடரப்பட்ட வழக்கில், 'மே, 1 மற்றும் ஜூலை, 24 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், கடந்த மாதம், 28ல் உத்தரவிட்டது.இதற்கிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதி கோரின. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு அனுமதி கோரியது. இதேபோல் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளும், தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி, மனு தாக்கல்செய்திருந்தன.இந்த மனுக்கள் மீது, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பு:தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு குறித்து, ஏப்ரல், 28ம் தேதி அளித்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நுழைவுத் தேர்வினால் மாநிலங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்விநிறுவனங்களின் உரிமை எதுவும் பாதிக்கப்படவில்லை.
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. அதனால், இதை எதிர்க்கும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதனால், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும்.அதே நேரத்தில், மே, 1ல்நடந்த, முதல்கட்ட நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் அல்லது அந்த நுழைவுத் தேர்வுக்கு சரியான முறையில் தயாராக முடியவில்லை என்று கருதுபவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் பங்கேற்கலாம். ஆனால் முதல் கட்ட தேர்வு முடிவை அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஜூலை, 24க்கு திட்டமிட்டுள்ள இரண்டாம் கட்டத் தேர்வைமாற்று தேதிக்கு மாற்ற விரும்பினால், அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இது குறித்து, சி.பி.எஸ்.இ., தனது பதிலை தெரிவிக்க வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, லோதா தலைமையிலான குழு, இந்த இரண்டாம் கட்டத் தேர்வையும் கண்காணிக்கும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022