வாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

வாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உடல்நலம் பாதித்த ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை- விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்கள் அவதி!!!

ஓய்வூதிய அலுவலகங்களில் வாழ்வு சான்று அளிக்க நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று அரசுஅறிவித்தும், அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் ஒத்துழைக்காத நிலையிலும் நேரில் வந்துஅவதிக்குள்ளாகி 
வருகின்றனர்.ஓய்வூதியர்கள் இறந்த பின்னும், அவருக்கு ஓய்வூதியம் சென்றுகொண்டிருப்பதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. 


நேர்காணலில் பங்கேற்காவிட்டால்ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேரில் வர இயலாதவர்கள் கடும் சிரமத்துக்கு இடையில், ஓய்வூதிய அலுவலகத்துக்கு வந்து நேர்காணலில் பங்கேற்றனர். இதற்கு ஓய்வூதியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள், வாழ்வு சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதை ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர், வருவாய் அலுவலர்கள் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அஞ்சல் மூலமாகவோ, வேறு நபர்கள் மூலமாகவோ ஓய்வூதிய அலுவலகத்துக்கு அனுப்பலாம் என்று அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், முதியவர்கள் பலர் கடும் சிரமங்களுக்கு இடையில் ஆட்டோக்களிலும், கார்களிலும் அழைத்து வரப்பட்டனர். வசதி குறைவானவர்கள், வீட்டிலிருந்தே நாற்காலியை கொண்டு வந்து, அதில் ஓய்வூதியரை அமர வைத்து, அவரை அலுவலகத்துக்கு தூக்கிச் சென்று நேர்காணலில் பங்கேற்க வைத்தனர்.இது தொடர்பாக ஓய்வூதியரை அழைத்து வந்த பெண் ஒருவரிடம் கேட்டபோது, “நேரில் வரத் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பும், அதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் குறித்தும் எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால், கண்டிப்பாக நேரில் அழைத்து வந்திருக்க மாட்டேன். 

அரசின் அறிவிப்பு குறித்து போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இது குறித்து மாற்று வழியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், இங்காவது, எளிதில் கண்களில் படும்படி விளம்பரப் பலகை வைக்கலாம். நான் எனது உறவினரை அழைத்து வர ஆட்டோவுக்கு வேறு செலவிட வேண்டியுள்ளது. அவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது” என்றார்.இது தொடர்பாக ஓய்வூதியர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னையில் 37 ஆயிரம் பேர் மாநில அரசு ஓய்வூதியம் பெறுகின்றனர். நேரில் வர இயலாதவர்கள், வாழ்வு சான்றை அனுப்பி வைத்தால் போதும் என்றே கூறுகிறோம். அது தொடர்பாக அனைத்து செய்தித் தாள்களிலும்செய்திகள் வந்துள்ளன. 

இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். நேரில் வர முடியாத 1,000 ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்வு சான்றை அனுப்பி வைத்துள்ளனர். அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் யாரையும் நேரில் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022