பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்


         தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.


தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.அனைத்து கல்லுாரிகளும், தங்களது உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களின் விவரம் அடங்கிய பட்டியல் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.இந்த விவரங்களின் படி, கல்வியியல் பல்கலை துணைவேந்தர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட குழுக்கள், கல்லுாரியில்நேரடி ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்க வேண்டும்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பெயரளவில் ஆய்வு நடத்தி, அரசியல் தலையீடு மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் அளித்த பட்டியல் போலியானது என்றும், அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில், அங்கு பேராசிரியர்கள் பணியாற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அந்தந்த கல்லுாரிகளுக்கு சொந்தமான பள்ளி, கலை கல்லுாரி ஆசிரியர்களை எல்லாம், பி.எட்., கல்லுாரிகளுக்கும் கணக்கு காட்டி, அங்கீகாரம் பெற்றதும் தெரியவந்துள்ளது.இதேபோல், பி.எட்., கல்லுாரி முதல்வராக, கல்வியியல் படிப்பில் பிஎச்.டி., முடித்தவரை நியமிக்க வேண்டும். ஆனால், வெளி மாநிலங்களில் பணி செய்யும் கல்லுாரி முதல்வர்களை, பெயரளவில் முதல்வராக, தமிழக பி.எட்., கல்லுாரிகள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.அதனால்,இந்த ஆண்டு முதல், இதுபோன்ற போலி பேராசிரியர்களை களையெடுக்கும் விதமாக, ஆசிரியர்களின் பெயர், சேர்ந்த தேதி, அவர்களின் சம்பளம் போன்ற விவரங்களை அளிக்க, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரம் உண்மையா என ஆய்வு நடத்தவும், கல்வியியல் பல்கலைகள் முடிவு செய்துள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022