பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு:நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


        பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


      இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

நிகழாண்டு செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் அவர்கள், தங்களது விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்கள் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் செப்.9-ஆம் தேதி வரை (செப்.4,5 தேதிகள் நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இந்தத் தேர்வை எழுதி தோல்வியுற்றவர்கள், முதல் முறையாக தேர்வு எழுதுவோர் ஆகியோர் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், தேர்வுக் கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை www.dge.tn.gov.in   என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஆன்-லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள், தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
மேலே குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022