4 பேருக்கு மேல் உள்ள ரேஷன் கார்டுகளில் வயதில்மூத்த பெண்மணி இனி குடும்ப தலைவர்.


           தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 4 பேருக்கும் மேல்உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்மணியே இனி குடும்ப தலைவர் என்றும், இதுதொடர்பான விபரங்களை விற்பனையாளர்கள் அந்தந்த ரேஷன்கார்டி
ல் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நேற்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ரேஷன்கார்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பாக காணொளி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உணவு பொருள் வழங்கல் ஆணையர் மாவட்டம் தோறும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும்,மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன் விபரம்:தமிழகத்தில் 1.11.2016 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 4 நபர்கள் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்குதலில் எவ்வித மாற்றமும் இல்லை.

தகுதியுள்ள ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும். 4 நபர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும். அந்த வகையில் 5 பேர் இருந்தால் 25 கிலோ அரிசி வழங்கப்படும். 6 பேர் இருந்தால் 30 கிலோ வழங்கப்படும். 15 பேர் ஒரே ரேஷன் கார்டில் இருந்தால் அவர்களுக்கு 75 கிலோ அரிசி வழங்கப்படும்.இதுதொடர்பாக ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டுள்ள ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் அதிகபட்ச அரிசி அளவை சரிபார்த்து அரிசி விநியோகம் செய்ய வேண்டும். இதற்காக பாயின்ட் ஆப் சேல் கருவிகளை விற்பனையாளர்கள் ‘வெர்ஷன் அப்டேட்’ செய்துகொள்ள வேண்டும். 4 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட பிஎச்எச் -பிரியாரிட்டி ஹவுஸ் ஹோல்டு எனப்படும் முன்னுரிமை பெற்றவர் ரேஷன்கார்டு விபரம் பாயின்ட் ஆப் சேல் கருவியில் வரும். அதனை ரேஷன்கார்டின் முன்பக்கம் அல்லது பின்பக்கம் ‘பிஎச்எச்’என்று ரேஷன்கார்டில் எழுதி வட்டமிட்டு குறிப்பிட வேண்டும்.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி இவ்வாறு 4 குடும்பஉறுப்பினர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டு முன்னுரிமை பெற்ற ரேஷன்கார்டு என்று பட்டியலிடப்படுகிறது. அவ்வாறு உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்மணியே இனி குடும்பதலைவர் ஆவார்.

 குடும்ப தலைவர் விபரம் அந்தந்த ரேஷன்கார்டு வாரியாக பாயின்ட் ஆப் சேல் கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை அந்தந்த ரேஷன்கார்டிலும் முன்புறம் விற்பனையாளர்களால் எழுதப்படவேண்டும்.ஆண்கள் மட்டுமே அல்லது 18 வயது நிரம்பாத பெண் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டுக்கு வயதில் மூத்த ஆண் உறுப்பினர் குடும்ப தலைவர் ஆவார். ஏற்கனவே உள்ளது போன்ற முறைப்படி அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும்.

இதில் கூடுதல் அரிசி ஏதும் வழங்கப்படாது. அனைத்து அரிசி பெறும் முதியோர் உதவித்தொகை ரேஷன்கார்டுதாரர்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.அடுத்துவரும் வேலை நாட்களில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ரேஷன்கடை விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022