அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்: கியூபாவின் சாதனை நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ!!!

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், அந்நாட்டின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.


        இது தொடர்பாக அவர் டிவி மூலம் வெளியிட்ட செய்தி: கியூபா புரட்சியாளரும், தலைவருமான பிடல் காஸ்ட்ரோ, வெள்ளி இரவு 22.29 மணியளவில் காலமானார் . பிடல் காஸ்ட்ரோ வயது 90. சமீப காலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
வரலாறு: 
இளமைப்பருவம்: 
கியூபாவின் ஹோஹால்கியூன் மாகாணத்தில் உள்ள பியன் என்னும் இடத்தில், அங்கல் காஸ்ட்ரோ ஓய் அர்கிஸ் என்ற விவசாயியின் மகனாக பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவரது இயர்பெயர், பிடல் அல்ஜென்டிரோ காஸ்ட்ரோ ரூஸ் என்பதாகும். இளம் வயதில் காஸ்ட்ரோ, தனது ஆசிரியருடன் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார். வரலாறு, புவியியல் மீது காஸ்ட்ரோவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. பள்ளி பருவத்தில் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தினார்.
காஸ்ட்ரோ, 1955ல் தனது முதல் மனைவி விவாகரத்து செய்ததை தொடர்ந்து, இரண்டாவது திருமணம் செய்தார். அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். 

மார்க்சிஸ்ட் கொள்கை: 
காஸ்ட்ரோ, 1945ல் இவர் ஹவானா பல்கலையில் சட்டப்படிப்பு படித்த போது, இடதுசாரி கொள்கையில் ஈர்ப்பு ஏற்பட்டது. கொலம்பியாவின் வலதுசாரி அரசுக்கு எதிராக நடந்த புரட்சியில் ஈர்ப்பு கொண்ட காஸ்ட்ரோ, கியூபாவில் அதிபராக இருந்த புல்ஜென்கியோ படிஸ்டாவை அகற்ற வேண்டும் என முயற்சி செய்தார். 
இதற்காக அவர் கடந்த 1953ல் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்காக காஸ்ட்ரோ ஒரு வருட சிறை தண்டனை அனுபவித்தார். சிறைவாசத்திற்கு பின்னர் காஸ்ட்ரோ மெக்சிகோ சென்றார். அங்கு காஸ்ட்ரோ, ரவுல் ஆகியோருக்கு புரட்சியாளர் சே குவேரா நட்பு கிடைத்தது. மூவரும் இணைந்து புரட்சி குழுவை அமைத்தனர். தொடர்ந்து நாடு திரும்பிய காஸ்ட்ரோ, அதிபராக இருந்த படீஸ்டா படைகளுக்கு எதிராக போரை நடத்தினார். இதில் படீஸ்டா படை தோல்வியடைந்தது. அவர் பதவி விலகினார். 


அமெரிக்கா எரிச்சல்: 
இதனையடுத்து ராணுவம் மற்றும் அரசியல் தலைமை பதவியே காஸ்ட்ரோ ஏற்றார். தொடர்ந்து அவர் கியூபா பிரதமராக பதவியேற்றார். பிரதமரான அவர் ரஷ்யாவுடன் நட்பு பாராட்ட துவங்கினார். பனிப்போர் நடந்து கொண்டிருந்த இந்த காலக்கட்டத்தில், ரஷ்யாவுக்கு கியூபா ஆதரவு அளிப்பதால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, காஸ்ட்ரோவை பதவியில் இருந்து அகற்ற தீவிர முயற்சி செய்தது. 


638 முறை கொலை முயற்சி: 

இதற்காக கொலை செய்ய நடந்த முயற்சிகள், பொருளாதார தடைகள், காஸ்ட்ரோவுக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்த முயன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 638 முறை காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா முயற்சி செய்தது. இருப்பினும், காஸ்ட்ரோ ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பை கடைப்பிடித்தார். கியூபாவில், ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கினார். 


புரட்சிகளுக்கு ஆதரவு: 
மார்க்சிஸ்ட் கட்சியின் லெனின் கொள்கையில் ஈர்ப்பு கொண்ட காஸ்ட்ரோ, கியூபாவை ஒரு கட்சி ஆட்சி நாடாக மாற்றினார். இதனையடுத்து கியூபா கம்யூஸ்ட் கட்சி ஆட்சியின் கீழ் வந்தது. இவரது ஆட்சியில், மத்திய பொருளாதார திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசு செலவில் செயல்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் கல்வி திட்டங்கள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன. அனைவருக்கும் இலவச கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
வெளிநாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகளுக்கு காஸ்ட்ரோ ஆதரவு வழங்கினார். இஸ்ரேலுக்கு எதிராக சிரியா மற்றும் எகிப்து நாடுகள் தாக்குதல் நடத்திய போதும், அங்கோலியா உள்நாட்டு போரின் போதும் கியூபா படையை அனுப்பி, காஸ்ட்ரோ உதவி செய்தார். 


பதவி விலகினார்: 
தொடர்ந்து உடல் நலக்குறைவால் தனது பொறுப்புகளை, 2006ல் துணை அதிபராக இருந்த ரவுல் காஸ்ட்ரோவிடம் வழங்கினார். பின்னர் 2008 ம் ஆண்டு, காஸ்ட்ரோ முழுமையாக பதவி விலகினார். ரவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார். கியூபா அதிபராக காஸ்ட்ரோ, 49 ஆண்டு ஆட்சியில் இருந்துள்ளார். 


வகித்த பதவிகள்: 
பிடல் காஸ்ட்ரோ கடந்த பிப்ரவரி 16, 1959 ம் ஆண்டு முதல் டிசம்பர் 2 1976 வரை கியூபா பிரதமராக பதவி வகித்தார். பின்னர், டிசம்பர் 2 1976 முதல் பிப்ரவரி 24, 2008 வரை அதிபராக பதவி வகித்தார். பிடல் காஸ்ட்ரோ, இரண்டு முறை அணி சேரா நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். 


இந்தியாவில் காஸ்ட்ரோ: 
1982-ஆம் ஆண்டு மார்ச் மாதம் டில்லியில் அணிசேரா இயக்க நாடுகளின் மாநாடு நடந்தது. இந்திரா பிரதமாராக இருந்தார். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 102 நாடுகளின் தலைவர்களுக்கு தனிப்பாதுகாப்பு வழங்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் துணைக்கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். 
பிடல் காஸ்ட்ரோ டில்லி அசோகா ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. டில்லியில் இருந்த நாட்களில் பிடல் காஸ்ட்ரோ, அந்த அறைக்கு ஒரே முறை வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் கியூபா தூதரகத்திலேயே தங்கிவிட்டார். டில்லியில் நடைபெற்ற மாநாட்டில், பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து, இந்திரா தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொண்டார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022