சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்
கொண்டு உள்ளது.


அடுத்த ஆண்டுக்கான(2018) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2018-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. நடத்தவுள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி பெற விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சியை சென்னை பி.எஸ்.குமாரசாமிராஜா சாலையில் அமைந்துள்ள இந்த மையம் நடத்தவுள்ளது.

இந்த மையத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. பயிற்சிக்காக விண்ணப்பிப்பதற்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர், பிளஸ்-2 முறைப்படி படித்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 2.8.86 தேதிக்குபிறகு 1.8.97 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். (21 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்).

எஸ்.சி., எஸ்.டி. இனத்தவருக்கு கூடுதலாக 5 ஆண்டு சலுகை உள்ளது. பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் வரையும் சலுகை உண்டு.

ஆன்லைன் மூலம் 21-ந் தேதியில் இருந்து வரும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபாரங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களும் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

5.11.17 அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை எழுத்துத் தேர்வு (அப்ஜெக்ட்டிவ் வகை) நடைபெறும். தற்காலிக விடைத்தாள் (கீ ஆன்சர்) 6.11.17 அன்று இணையதளத்தில் கிடைக்கும். 15.11.17 அன்று தேர்வு முடிவு வெளியிடப்படும்.

ஆன் லைனில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.civ-i-ls-e-rv-i-c-e-c-o-a-c-h-i-ng.com. என்ற இணையதளத்தை அணுகலாம்.

விண்ணப்பபாரங்களை சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலகத்தில் இலவசமாகப் பெறலாம். அப்போது வயது மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

சென்னையில் வசிப்போர், “முதல்வர், அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், காஞ்சி பில்டிங், 163/1, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை (கிரீன்வேஸ் சாலை), ஆர்.ஏ.புரம், சென்னை-28 (போன்:044-24621475)” என்ற முகவரியில் வாங்கி, பூர்த்தி செய்து அந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு முறையில் விண்ணப்பித்தால் போதுமானது. இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சென்னை, கடலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடக்கும்.

ஹால்டிக்கெட்டை 20.10.17 அன்று முதல் www.civilservicecoaching.com. என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபாலில் ஹால்டிக்கெட் அனுப்பப்படமாட்டாது. தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்திய வரலாறு, பொருளாதாரம், நிர்வாகம், தற்போதைய நிகழ்வுகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு முடிவுகளையும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் மைய அலுவலக தகவல் பலகையிலும், இணையதளத்திலும் காணலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதிக்கான அழைப்பும் ஆன்லைன் மூலமே விடப்படும்.

முழுநேர பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட இதர வகுப்பு பிரிவினரிடம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். காலை 10 முதல் மாலை 5 மணிவரை வகுப்புகள் நடக்கும். இவர்களுக்கு இலவசமாக தங்கி படிக்கும் வசதி உண்டு.

பகுதிநேர பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வாரநாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை வகுப்புகள் நடத்தப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை வகுப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022