கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி,

கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் !!
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பது
தான் எனது நிலைப்பாடு.
ஏனெனில், இப்படி அவ்வப்போதைக்கான தீர்வு என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்வியுலகத்துக்கும் பெரிய குழப்பத்துக்குத்தான் வழிவகுக்கும். அந்தந்த வருடத்துக்கான தற்காலிகத் தீர்வுகளால் அந்தந்த வருடத்தில்
படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் பலன் ஏற்படும்; வேறு யாருக்கும் இது பலனளிக்காது. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால், கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கையில் இருக்கக் கூடாது; அவை மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும். நெருக்கடி நிலைக்கு முன்னால் இருந்ததைப் போல் மாநில அரசுகளின் அதிகார வரம்பில்தான் கல்வி இருக்க வேண்டும். ஒரே மாநிலத்துக்கு எப்படி விலக்கு கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்?

அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு அநீதி இழைக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது உண்மைதான். ஆனால், அதற்கு முன்னர் அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு என்ன நீதி கிடைத்துக்கொண்டிருந்தது? இந்த மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்? உண்மையில், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்துவந்த வாய்ப்புகளும் தற்போது அதிக அளவில் பறிபோயிருக்கின்றன. அதற்காக நீட் தேர்வை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. நிச்சயம் நீட் தேர்வு கூடாது. நீட் தேர்விலிருந்து நமக்கு நிரந்தர விலக்கு வேண்டும். அதற்காகத்தான், மத்திய அரசின் கையிலிருந்து மாநில அரசுகளின் கைக்குக் கல்வி அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்கிறேன். இதற்கு எல்லா மாநிலங்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில், கிராமப்புறப் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்களுக்கு எப்போதுமே அநீதிதான் இழைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நீட் தேர்வை ஒரு அதிர்ச்சி வைத்தியமாக எடுத்துக்கொள்ளலாம் என்பேன். அதன் தொடர்ச்சியாகத்தான் பாடத்திட்டத்தையெல்லாம் மாற்றுவதாக அறிவித்திருக்கிறார்கள். இது மாணவர்கள் பாடத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும் திறன், அலசி ஆராயும் திறன், தாமாகவே படித்துப் புரிந்துகொள்ளும் திறன், கேள்வி கேட்கும் திறன் ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் பாடத்திட்டமாக இது அமைய வேண்டும். நீட் போன்ற தேர்வுகளில் இவைதான் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதை பாடத்திட்ட உருவாக்கத்துக்காகப் போடப்பட்டிருக்கும் குழுக்கள் இவற்றில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்!

-வே.வசந்திதேவி, கல்வியாளர், முன்னாள் துணை வேந்தர்

- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022