மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும்

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே.. என்பது பிரபலமான திரைப்படப்பாடல்.
ஆம் ! இந்த மண்ணில் பிறக்கிற எல்லா குழந்தைகளும் நல்ல மனநிலையில் தான் பிறக்கிறார்கள் .கள்ளம் கபடம் அற்ற அன்பின் வடிவம் தான் குழந்­தைகள். அம்மா பிடிக்குமா , அப்பா பிடிக்குமா  என்று கேட்டால் குழந்தை தலையை ஆட்டி , புன்­னகை புரிந்து , உதட்டில் விரலை வைத்து மழலை மொழியில் இரு­வரையும் பிடிக்கும் என்று மனதைப் புண்­ப­டுத்­தாமல் கூறும் வார்த்­தையில் பொதிந்­துள்ள மனநல சிந்­த­னையை நம்மில் பலர் அறிந்ததில்லை . . அப்­ப­டிப்­பட்ட கள்ளம் கபடம் அற்ற உள்ளம் வஞ்­சகம் , குரோதம் , பழி வாங்கும் உள்­ள­மாக மாறு­வதன் காரணம் என்ன  என்­பதை சிந்திக்க வேண்டும்
குழந்தைகளின் மனநல பாதிப்­புக்­கான கார­ணங்கள் :
புரி­யாத வயதில் இளம் பெண்கள் தாய்­மை­ய­டைந்து குழந்­தை­களை அனாதையாக விடுதல்  ,
இளம் வயது திரு­மணம்,
குடும்ப வாழ்க்­கையில் ஏற்படும்  ஒழுக்­கப்­பி­ரச்­சினை , சந்­தேகம் , பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மாக தினமும் தொடரும் சண்டைகள் , பிரி­வுகள், விவா­க­ரத்­துக்கள் என்­ப­ன­வற்றைப் பார்த்து
அனு­பவிக்கும்  குழந்­தை­களின் மன­நி­லையைப் பாதிக்கப்படுகிறது .
அவ­சர உலகில் தாய் தந்தை இரு­வரும் வேலைக்குச் செல்­வது தேவைதான். அன்­பிற்­கா­கவும் , அர­வ­ணைப்­பிற்­கா­கவும் ஏங்கும் குழந்தை­களை அன்­புடன் வாரி அணைத்து வளர்க்க ஆர்­வ­முடன் இருக்கும் தாத்தா பாட்டி போன்ற உறவுமுறைகள் இருக்கும் போது வேலைக்­கா­ரர்­க­ளு­டனும் வேறு இடங்­க­ளிலும் விடு­வது , பாலூட்டும் வயதில் ஏங்க வைப்­பது , தாய் மடியில் விளை­யாடி இன்பம் பெறத் துடிக்கும் வயதில் அன்பை மறந்து வீண் வார்த்­தைகள் பேசுதல் , அடித்தல்  , கதவைப் பூட்டி வைத்து விட்டு வெளியே செல்லல் போன்றவை மன­நி­லையைப் பாதிக்கும்.
விரல்­களைப் பிடித்து எழுத உறுதி அடைய முன்னர் எழு­த­வித்தல் , மழலை  மாறாத  வயதில் பள்ளிக்கு அனுப்­புதல்,  பள்ளிக்கு செல்லும் முன்பே  படி படி எனத் துன்­பு­றுத்தல் , சொற்­களை எழு­தும்­படி வற்­பு­றுத்­துதல் என்­ப­னவும் மனநி­லையைப் பாதிக்­கின்­றன.
பள்ளி வகுப்பறையில் ஏற்படும் மனநிலை பாதிப்புகள்  :
குழந்­தைகள் பள்ளிக்கு  வருகை தரு­வ­தற்கு முன் அனு­ப­வித்த மனநல அனு­ப­வங்கள் , அவர்­களின் நடத்தையை மாற்றக்கூடிய வகையில்  அமை­கின்­றன.
குழந்தைகளின் மனநல இயல்புகள் வெளிப்படையாக தெரியும் ஒரு வகை இருப்பினும் வெளியே புலப்­ப­டாமல் தமக்­குள்ளே அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­பதும் ஒரு­வ­கை­யினர். வகுப்­ப­றையில் கட்­டுப்­ப­டாமல் தம் விருப்­பப்­படி ஓடித்­தி­ரிதல் , வெளியே  செல்லல் , பக்­கத்தில் இருப்­ப­வர்­களை கிள்­ளுதல் நிறை­வே­றாத ஆசை­களின் தாக்கம் கார­ண­மாகக் களவாடுதல் , அதனை மறைப்­ப­தற்குப் பொய் கூறுதல், எதிர்த்தல் , முறைத்துப் பார்த்தல் , தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்தல், அடித்தல் , பென்­சிலால் தாக்­குதல், ஒழுக்கச் செயற்­பா­டு­களை மீறுதல் போன்­றன ஒரு­வ­கை­யாகும்.
வன்­முறை தண்­ட­னை­க­ளுக்குப் பயந்து மன­நலம் பாதிக்­கப்­பட்ட  குழந்­தை­களின் பண்பு வேறு­வகை. வகுப்­ப­றை­களில் தனி­மையை நாடுதல் , பயந்த சுபாவம் , ஆசி­ரி­யரைக் கண்டால் பயந்து நடுங்­குதல் , முன்னே எழுந்து நடப்­ப­தற்கு , பேசுவதற்கு  பயப்­ப­டுதல் ,பிறர் தன்னைப் பார்க்­கி­றார்கள், ஏளனம் செய்­கி­றார்கள் எனப் பயப்­ப­டுதல் என்­பன இவர்­களின் நடத்­தை­யாகும்.
சில உள­நலப் பாதிப்­புக்கள் வெளியில் தென்­ப­டு­வ­தில்லை. பொறாமை , பிற­ருடன் கலந்து பழ­காமை , பிற­ருக்கு உதவி செய்­யாமை. சுய­நலம் , தெரிந்­த­வற்றை புரி­யா­த­வர்­க­ளுக்குச்  சொல்லிக் கொடுக்­காமை
ஒரு­புறம். புத்­த­கங்கள் , குறிப்­புக்கள் முக்­கிய கரு­வி­களை கள­வாடுதல் . நன்­றாகப் படிக்கும் மாண­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்தல் , வீண்­ப­ழி­களைச் சுமத்தல் , கார­ண­மின்றித் தாக்­குதல் என்­பன ஒரு­வ­கை­யாகும்.
இவ்­வா­றான குழந்­தை­களை மனநல சிந்­த­னை­யுடன் அணு­குதல் முக்­கி­ய­மா­னது. இவர்­களின் நடத்தைகள்  , பண்­புகள் , செயற்­பா­டு­களின் காரணங்கள் சரி­யாக அறி­யா­விட்­டாலும் உளவியல்  ரீதியில் அணுகினால் மன­நி­லையை மாற்­றலாம்,
சரி­யான முறையில் அணு­கா­விட்டால் எதிர்­கால விளைவுகள் :
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முதல் வகையினர்  வளர்ந்த பின்பு  நிம்­ம­தியைத் தேடி , அலைந்து ,முறை­யற்ற வழியில் இன்பம் காண­முற்­ப­டு­வார்கள். தவ­றான பாலியல் நட­வ­டிக்­கைகள், குடிப்பழக்கம், ஹெரோயின் , கஞ்சா , போதை மாத்­தி­ரைகள் போன்ற மருந்­து­களை உடலில் பாய்ச்­சுதல் போன்­ற­வற்றால் உலக சிந்­த­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு அழுத்­த­மற்ற மன­நி­லை­யுடன் இன்­பத்தை அனுபவிக்கிறார்கள் இதற்கு  அடி­மை­யா­ன­வர்கள் இந்த            இன்­பத்­தி­லி­ருந்து விடு­ப­ட­மாட்­டார்கள். பணம் அற்ற நிலையில்   கொள்­ளை­ய­டித்தல் , பிற­ரைத்­துன்­பு­றுத்தல் , கொலைகள்  போன்ற  வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.
இரண்­டா­வது வகை­யினர் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்­கின்ற பிரச்­சி­னை­களைச் சமா­ளிக்­க­மாட்­டார்கள். தோல்­வி­களைத் தாங்கும் மன­நிலை இவர்­க­ளுக்கு இருக்­க­மாட்­டாது எதற்கும் பயப்­ப­டுதல் , யோசித்தல்  கவலைப்­ப­டுதல் , கண்ணீர் வடித்தல் , ஏங்­குதல் இவர்களின் பண்­பாகும். சிலர் மன­நிலை பாதிக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்டுத் தவிப்­பார்கள்.
சுய­ந­லத்தால் ஒரு­சிலர் வாழ்வில் நிம்­மதி இன்றி அலைந்து பிறரின் வாழ்­விற்கும் இடை­யூ­றாக அமை­வார்கள்.
ஆசி­ரி­யர்­களின் பங்­க­ளிப்பு :
பல்­வேறு மன­நி­லை­யுடன் நாடி­வரும் குழந்­தை­களை நேரடியாகக்  கையா­ளு­ப­வர்கள் ஆரம்ப பள்ளி  ஆசி­ரி­யர்­களும், தொடக்க பள்ளி ஆசி­ரி­யர்­களும் ஆவர். கல்­வியில் மட்­டு­மல்­லாமல் அவர்கள் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு இவர்­க­ளிடம் தான் உள்­ளது.
பொறு­மை­யுடன் அன்பு காட்டி குழந்­தை­களின் மன­நி­லையை உணர்ந்து  ஆழ­மாக ஆராய்ந்து அறிந்து  நெறிப்­ப­டுத்தக் கூடிய மன­நலம் சம்பந்தமான அறிவும் பயிற்­சியும் அவ­சி­ய­மா­ன­தாகும்.
பெற்­றோரின் பங்கு :
குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்தே தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .அவர்களின் வாழ்வே இவர்களுக்கு முன்னுதாரணம் .சண்டை ,சச்சரவு இல்லாத ஒற்றுமையான கணவன் மனைவி உறவே குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது வாழ்க்கை முறைகள், ஒழுக்கம் , அன்பு , இரக்கம் , தாய் தந்தை சகோதர பாசம் , குடும்ப  உறவுகளை பேணல் போன்றவற்றை சொல்லி கொடுப்பதுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து உரையாடுவது ,அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுதல் ,பெற்றோர்களின் அன்பை குழந்தைகளுக்கு புரிய வைத்தல் போன்றவை மிக மிக முக்கியமானது
நல்ல பெற்றோரும்,கல்வி சூழலும் ,ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குகிறது ,

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022