மழைக்கால விடுமுறை விதிமுறை!!!

'வெறும் துாறலுக்கு எல்லாம், பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது' என, மாவட்ட கலெக்டர் களுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை விடுவதில், எந்த விதிமுறையும் கிடையாது. 



லேசான துாறலுக்கு கூட, முன்னெச்சரிக்கை என்ற பெயரில், விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.சென்னை தவிர, பிற மாவட்டங்களில், 10 செ.மீ., மழை பெய்தால் கூட, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், லேசாக துாறல் விழுந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை கோரி, ஒரு கும்பல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறது. வேறு வழியின்றி, கலெக்டர்களும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர்.இதனால், சென்னை மாணவர்களுக்கு, அதிக விடுமுறை கிடைத்து, பாடங்களை நடத்த முடியாமல், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது. 

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, விடுமுறை அறிவிப்புக்கு, பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன் விபரம்:புயல் மற்றும் மிக கன மழை எச்சரிக்கை உள்ள காலங்களில், முன்னெச்சரிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். மழை, வெள்ளம் மற்றும் புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு, அரசு பள்ளிகள் நிவாரண முகாம்களாக பயன்படுத்தப்படும். சமீப காலமாக, சாதாரண மழை துாறல், இயல்பான மழை காலம், வெயில் அடிக்கும் காலங்களில் கூட, பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்கின்றனர். அதனால், பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு தேதியை இலக்கிட்டு, பாடம் நடத்துவது கடுமையாக பாதிக்கப்படுகிறது 

இனி வரும் நாட்களில், மழைக்கான விடுமுறை அறிவிப்பதில், சில விதிகளை பின்பற்ற வேண்டும். 
 பெரும் மழையால், சாலைகளில் நீர் தேங்கி, போக்கு வரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றால், விடுப்பு அறிவிக்கலாம். மாறாக, வெறும் துாறலை காரணமாக வைத்து, விடுமுறை அறிவிக்கக் கூடாது
 பள்ளிகள் திறக்கும் நேரத்துக்கு, மூன்று மணி நேரத்துக்கு முன், வானிலை சூழல் மற்றும் முன்னெச்சரிக்கையை கணக்கிட்டு, பள்ளிகளுக்கான விடுமுறையை முடிவு செய்ய வேண்டும் 
 முதன்மை கல்வி அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து, பள்ளிகளை நடத்தலாமா, விடுமுறை விடலாமா... என, கலெக்டருக்கு கருத்து தெரிவிக்கலாம்
 எந்த பகுதிக்கு பாதிப்போ, அங்கு மட்டும் விடுமுறை விட வேண்டும். முழு வருவாய் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கக் கூடாது. கல்வி மாவட்டம், ஒன்றியம் அல்லது உள்ளாட்சி பகுதி என, பிரித்து விடுமுறை அறிவிக்கலாம்
 மழைக்கால விடுமுறை என்றாலும், உள்ளூர் கோவில் விழாக்களுக்கான விடுமுறை என்றாலும், அதற்கு இணையாக, இன்னொரு நாள் கூடுதலாக பள்ளிகள் இயங்கி, வகுப்புகளை முழுமையாக நடத்த வேண்டும் 
 அந்த விடுமுறை நாளுக்கான பாட திட்டப்படி, முழுமை யாக வகுப்புகள் நடத்த வேண்டும். விடுமுறை யால், எந்த பாடமும் விடுபடக் கூடாது
 மழை காலங்களில், பள்ளிகளை விரைந்து திறப்பதற்கு ஏற்ற வகையில், அந்த பகுதியிலும், பள்ளியிலும், தேங்கிய நீரை வெளியேற்றுதல், வளாகத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை, விரைந்து முடிக்க வேண்டும் 
 இந்த விபரங்களை ஆய்வு செய்து, கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022