128 ஆசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு - அரசு முடிவு

தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர் பதவிக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், ஏற்கனவே, பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. 2009ல், மத்திய அரசின், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தை பின்பற்றி, ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதி தேர்வு நடத்த வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, 2011 முதல், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி நியமனம் வழங்கப்பட்டது. அதிலும் சர்ச்சை எழவே, 'தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், ஆசிரியர் பணியில் சேர, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, 2018 ஜூலையில், தமிழக அரசு அறிவித்தது.அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வில்லை. அதனால், போட்டி தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.



இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக் கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதை அமல்படுத்தும் வகையில், 128 ஆசிரியர் பணியிடங்களுக்கு, முதல் முறையாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில், பழங்குடியினத்தவருக்கான, 12 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:'டெட்' தேர்ச்சி பெற்றவர் களுக்கு, போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் நடைபெறும். போட்டி தேர்வுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 'ஆன் லைனில்' பதிவு செய்ய வேண்டும்.தேர்வு குறித்த அறிவிப்புகள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.



இதில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, 36 ஆயிரம் முதல், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.சிறப்பாசிரியர் நியமனம்உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பழங்குடியினர் பிரிவில், 17 சிறப்பாசிரியர்கள்; கள்ளர் சீர்திருத்த பள்ளிகளில், பட்டியல் இனத்தவருக்கான, நான்கு முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பையும், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022