கணினி விசைப்பலகை (computer keyboard)ஏன் அகர வரிசையில் இல்லை?

ஆங்கில கம்ப்யூட்டர் கீபோர்டில் (கணினி விசைப்பலகை) எழுத்துகள் ஏன் அகர வரிசைப்படி அமைக்கப்படாமல் இருக்கின்றன, தெரியுமா?



ஆங்கிலக் கணினி விசைப்பலகை என்பது பழைய டைப்ரைட்டரிலிருந்து தகவமைக்கப்பட்டதுதான். முதல் தலைமுறை டைப்ரைட்டர்களில் விசைப்பலகைகள் ஆங்கில அகர வரிசைப்படிதான் வைக்கப்பட்டன. பிறகு ஏன் அந்த முறை கைவிடப்பட்டது?


வந்தது QWERTY


ஆங்கிலத்தில் குறிப்பிட்ட சில எழுத்துகள் அதிகம் பயன்படுத்தப்படும். டைப்பிஸ்ட்கள் வேகமாக அடிக்கும்போது, அழுத்த வேண்டிய விசைக்குப் பதிலாகப் பக்கத்தில் இருந்த விசைகளை அழுத்த ஆரம்பித்ததாகவும், அதனால் விசைகள் சிக்கிக்கொள்ள ஆரம்பித்தன என்றும் கூறப்படுகிறது.

இதற்குத் தீர்வாகத்தான் QWERTY விசைப்பலகை வந்ததாக ஒரு கதை உண்டு. விசைப்பலகையில் முதல் எழுத்து வரிசையில் உள்ள எழுத்துகள்தான் QWETY. கணினி விசைப்பலகை வரை, இந்த விசைப்பலகை முறையே ஆட்சி செலுத்தி வருகிறது. ஆனால், மேலேகூறப்பட்ட காரணத்துக்கு உத்தரவாதமான ஆதாரம் ஏதுமில்லை.

பியானோ வடிவமைப்பு


1860-ல் பத்திரிகையாளரும் அச்சகருமான கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ், நான்கு பேருடன் சேர்ந்து ஆரம்பகாலத் தட்டச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். 1868-ல் அதற்குக் காப்புரிமையும் பெற்றார். அந்தத் தட்டச்சு இயந்திரம் பியானோ இசைக் கருவியின் உள் வடிவமைப்பைப் போல இருந்தது. 28 விசைகளுடன் அகர வரிசையில்தான் இருந்தது.


இந்த விசைப்பலகைக்கான காப்புரிமையுடன் ரெமிங்டன் நிறுவனத்துடன் ஷோல்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், அந்தத் தட்டச்சு இயந்திரம் தயாரிப்புக்குப் போவதற்கு முன், 1878-ல் மற்றொரு விசைப்பலகைக்குக் காப்புரிமை பெறப்பட்டது. அதுதான் QWERTY விசைப்பலகை.

ஒரு லட்சம்


ரெமிங்டன் ஏற்கெனவே பிரபல நிறுவனமாக இருந்ததால், 1890-ல் ஒரு லட்சம் தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. 1893-ல் ரெமிங்டன், காலிகிராஃப், யோஸ்ட், டென்ஸ்மோர், ஸ்மித் பிரீமியர் ஆகிய ஐந்து முக்கியமான தட்டச்சுத் தயாரிப்பு நிறுவனங்களும் யூனியன் டைப்ரைட்டர் என்ற நிறுவனத்தை உருவாக்கிய பிறகு, QWERTY விசைப்பலகைக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழவில்லை.

ரெமிங்டன் நிறுவனம் டைப்ரைட்டரை விற்பனை செய்ததுடன், குறைந்த கட்டணத்தில் தட்டச்சு பயிற்சியையும் வழங்கியது. அங்கே பயிற்சி பெற்ற டைப்பிஸ்ட்கள், வேறு விசைப்பலகைகளை ஆதரிக்கும் மனநிலையில் இல்லை.

உண்மைக் காரணம்


சரி, QWERTY உருவாக்கப்பட்டதற்கான காரணம் என்ன? ஆரம்பக் காலத்தில் மோர்ஸ் குறியீடுகளை மொழிபெயர்த்து தொலைதூரத்திலிருந்து வரும் தந்தியின் வாசகங்களை எழுதும் கருவியை இயக்குபவர்கள்தான் தட்டச்சு செய்ய முன்வந்தார்கள். அவர்கள் விரைவாகச் செய்திகளை எழுதி, மொழிபெயர்க்க வசதியாக இருந்த இயந்திரத்தை ஆதரிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே, தந்திக்கான செய்தியைப் பெயர்த்து எழுதுவதற்கு மாறுபட்ட முறையை அவர்கள் கற்றிருந்தார்கள். அதனால் தட்டச்சு செய்யும்போது அகர வரிசையில் இருந்த எழுத்துகள் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தின. அதனால் தந்தி அடிப்பவர்களுக்கு வசதியாகவே QWERTY விசைப்பலகை உருவானதாகக் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கோய்ச்சி யாசுகா, மோட்டோகோ யாசுகா கூறுகிறார்கள்.

டாக்டர் ஆகஸ்ட் ட்வோரா என்பவர் 1930-ல் எளிய விசைப்பலகையைக் கண்டுபிடித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே QWERTY தகர்க்க முடியாத கோட்டையாகி இருந்தது. கோடிக்கணக்கானவர்கள் QWERTY தட்டச்சு விசைப்பலகைக்குப் பழகியிருந்ததால், அதுவே பிற்காலத்தில் கணினி விசைப்பலகையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொசுறு:


இன்றைக்கு ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் விசைப்பலகையின் பெயர் KALQ. இது QWERTY விசைப்பலகையில் இருந்து மாறுபட்டது. கட்டைவிரல்களைக் கொண்டே தட்டச்சு செய்யக் கூடியது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022